Monday, April 22, 2019

சமூகப் போராளி எஸ்.நடராசன்

தோழர் எஸ்.நடராசன்.

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள பணகுடி கீழபுதூர் கிராமத்தை சேர்ந்த சுப்பையா – இசக்கியம்மாள் தம்பதியருக்கு நான்காவது மகனாக 1946 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 10 ஆம் தேதி பிறந்தவர் தோழர் எஸ்.நடராசன்.

பக்தியின் ஈடுப்பாட்டால் தனது மகன்களுக்கு மாசானம், சுடலைமுத்து, ராசய்யா, பேச்சிமுத்து என்று பெயர் வைத்த சுப்பையா, கோரியூர் பள்ளியில் சேர்த்த போது, பேச்சிமுத்து என்கிற பெயரை நடராசன் என்று மாற்றி வைக்க ஆசிரியர் கேட்ட போது, அதற்கு சம்மதம் தெரிவித்திருக்கிறார்.

இடது சாரி இயக்கத்தினரால் தோழர் எஸ்.என். என்று பெருமையுடன் அழைக்கப்படுகின்ற நடராசன், ஐந்தாம் வகுப்பு வரை கோரியூர் பள்ளியிலும், எட்டாம் வகுப்பு வரை வடலிவிழை உயர்நிலைப் பள்ளியிலும், எஸ்.எஸ்.எல்.சி. வகுப்பை வள்ளியூர் மேல்நிலைப் பள்ளியிலும் முடித்தார்.

அவரது சகோதரர் ராசய்யா, சென்னையில் உள்ள கோடம்பாக்கத்தில் காபித் தூள் கடை வைத்திருந்தார். அவரை பார்க்க சென்னை வந்த நடராசன், அவருடன் தாங்கியவாறு தனது படிப்புக்குத் தகுந்த வேலைக்கு முயற்சி செய்தார்.

காவல் துறையில் இருந்தும், பெரம்பூரில் இருந்த பிஅன்ட்சி மில்லில் இருந்தும் அவருக்கு அழைப்புகள் வந்தன. போலீஸ் வேலைக்கு மாதம் எழுபது ரூபாய். பி. அன்ட் சி மில்லில் மாதம் 350 ரூபாய் சம்பளம். இதனால்,  பி. அன்ட் சி மில்லில் வேலைக்குச் சேர்ந்தார் நடராசன்.

சிறுவயதில் நடராசன் 
பக்கிங்காம் கர்நாடிக் மில் என்று அழைக்கப்படும் பி.அன்ட் சி மில்லில் 1967 ஆம் ஆண்டு 15,000 தொழிலாளர்களுடன் இணைந்து வேலை செய்ய தொடங்கிய நடராசன், அந்தத் தொழிலாளர்களுக்குப் பொதுச் செயலாளராகப் பிற்காலத்தில் வரப்போகிறாம் என்பது அவருக்கே தெரியாது.

வேலைக்குச் சேர்ந்த மூன்றாவது ஆண்டில் பி. அன்ட் சி மில் சென்னை தொழிலாளர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினராகப் பதினெட்டு பேரில் ஒருவராக 1970 ஆண்டு தேர்வு செய்யப்பட்டார். அனைவராலும் கொண்டாடப்பட்ட எஸ்.எஸ்.சி. அந்தோணி பிள்ளை தலைவராகத் தேர்வாகி இருந்தார்.

வட சென்னையில் உள்ள பல நிறுவனங்களின் தொழிலாளர் அமைப்பின் தலைவராக இருந்த அந்தோணி பிள்ளை, பாராளுமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிட்டு வெற்றி பெற்றவர். பெரும் செல்வாக்கும் மரியாதையும் பெற்றிருந்த அந்தோணி பிள்ளையின் நிர்வாகத்தில் முக்கிய நபராக நடராசன் கவனிக்கப்பட்டார்.

தோழர் நல்லக்கண்ணுவுடன் நடராசன்
மில் தொழிலாளர்களின் உரிமைகளுக்காக இரவு பகல் பாராது சிந்திக்கத் தொடங்கிய நடராசன், தொழிலாளர்களுக்காக நிர்வாகத்துடன் பேசுவது, விடுமுறை உட்பட தொழிலாளர்களின் பல பிரச்சினைகளைத் தீர்க்க உதவியாக இருப்பது என்று அனைத்திலும் தனது பங்களிப்பை வழங்கினார்.

பள்ளியில் மதிய உணவு அளித்த கர்மவீரர் காமராஜர் மீது கொண்ட மரியாதையினால், ஆரம்பத்தில் காங்கிரஸ் கட்சியின் அனுதாபியாக இருந்த நடராசன், பிறகு தி.மு.க. தொழிற்சங்கத்திற்கு ஆதரவாக இருந்து செயல்பட்டார்.

தொழிலாளர்களுக்கு சேர வேண்டிய மூன்றாயிரம் ரூபாய் கிடைக்கவில்லை என ஒரு போராட்டம் 1972 ஆம் ஆண்டு நடைபெற்ற போது, அதில் முப்பது தொழிலாளர்களுடன் சேர்த்து அவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். ஒரு வருடத்திற்குப் பிறகு இருபத்தி எட்டு பேர்களுடன் மீண்டும் வேலைக்குத் திரும்பினார்.

தாய் இசக்கியம்மாள் 
மூன்றாயிரம் புதிய தொழிலாளர்களுக்கு ஒரு பிரச்சினை வந்த போது அதற்கு முதல் ஆளாக நின்று கேள்வி கேட்க ஆரம்பித்தவர், தொழிலாளர்களைக் காப்பாற்ற சங்க விதிமுறையில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என்று ஏழாவது விதிமுறையை மாற்ற போராடிய க.சுப்புவுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

பி.அண்ட் சி மில் தொழிற்சங்கத்திற்கு எதிராக சி.பி.எம். கட்சியில் இருந்து வி.பி.சிந்தன், மைதிலி சிவராமன் உட்பட பலர் கொண்ட ஐக்கிய குழு தயாரான போது, அதில் இணைந்து கொண்டார்.

1972 - ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் லிபரேசன் அமைப்பின் தொடர்பு இவருக்கு கிடைக்கிறது. அவர்களின் சிந்தனையோடு பி.அண்ட் சி மில் தொழிலாளர்கள் பலரை இணைத்து உழைக்கும் மக்கள் மாமன்றம் பி.அண்ட் சி மில் கிளை என்கிற அமைப்பை தொடங்குகிறார் எஸ்.நடராசன்.

தலைவராக எஸ்.நடராசன், பொதுச்செயலாளராக பிரான்சிஸ், பொருளாளராக மாதவராவ் ஆகியோர் பொறுப்பேற்றனர். 

பல தொழிற்சங்கங்கள் கட்சி சார்ந்து இயங்கிய போது, கட்சி சாரா அமைப்பாக உழைக்கும் மக்கள் மாமன்றம் பி அண்ட் சி மில் கிளை செயல்பட்டது. அதற்கு ஆதரவாளர்கள் பெருகினர்.

மனைவி பானுமதியுடன் நடராசன்
யூனியன் தேர்தல் 1975-ல் நடைபெற இருந்த காலகட்டத்தில் க.சுப்பு எமர்சென்சியில் கைதான போது, தேர்தலில் தி.மு.க. ஆதரவுடன் குசேலர் போட்டி போட எண்ணி அனைத்து தொழிற்சங்க தோழர்களையும் அழைக்கிறார். அவருக்கு நடராசனின் உழைக்கும் மக்கள் மாமன்றம் முழு ஒத்துழைப்பு அளிக்கிறது.

1976 ஆம் ஆண்டு குசேலர் தலைமையில் உள்ள அணியும், அந்தோணி பிள்ளை தலைமையில் உள்ள அணியும் போட்டியில் கலந்து கொண்டன. குசேலர் தலைவராகவும், அந்தோணி பிள்ளை அணியைச் சேர்ந்த சி.கே.நாராயணன் பொதுச் செயலாளராகவும் வெற்றி பெறுகின்றனர். அதன் பிறகு 1980 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் குசேலர் தலைவராகவும், எஸ்.நடராசன் பொதுச் செயலாளராகவும் தேர்வாகின்றனர்.

தொழிற்சங்கம் வைக்க தொழிலாளர் உரிமைக்காகப் போராடிய இரண்டு பெண்கள் உட்பட பதினெட்டு பேர் துப்பாக்கி சூட்டில் உயிர் தியாகம் செய்து இந்தியாவின் முதல் தொழிற்சங்கமான சென்னை தொழிலாளர் சங்கம் உருவானது. இந்த சங்கம் எந்த கட்சியையும் சார்ந்தது கிடையாது. 

வெள்ளையர் ஆட்சிக் காலத்தில் 1918 ஆம் ஆண்டு உருவாகிய இந்த சங்கத்திற்கு சர்க்கரை செட்டியார், செல்வபதி செட்டியார், ராமானுஜ நாயுடு ஆகிய மூவரும் ஆதரவாக இருந்தார்கள். ‘யங் இந்தியா’ என்கிற பத்திரிகையை நடத்திக் கொண்டிருந்த அன்னிபெசன்ட் அம்மையார், பி.வி.வாடியா, திரு.வி.கல்யாணசுந்தரம், சிங்காரவேலர் போன்றவர்கள் சட்ட ரீதியாக உதவி செய்தார்கள்.
வட சென்னையில் உள்ள பல நிறுவனங்களில் பணியாற்றிய தொழிலாளர்களை இணைத்து, அந்த அமைப்பில் பி. அண்ட சி மில் தொழிலாளர்களும் இணைத்திருந்தனர். நூறு ஆண்டுகளாக செயல்பட்டு வந்த அந்த அமைப்பில் முதல் முறையாக தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த தோழர் எஸ்.நடராசன் பொதுச்செயலாளர் ஆனார்.

அவர் பொதுச்செயலாளர் ஆன பிறகே அவர் தாழ்த்தப்பட்டவர் என அறிந்தனர்.

தொழிலாளர்களுக்காகத் தொழிற்சங்கம் சார்பில் பல போராட்டங்களைக் கண்டவர் தோழர் எஸ்.நடராசன். அதற்காக கைதாகி ஒரு வாரம், பதினைந்து நாட்கள் என பல முறை சிறை சென்றிருக்கிறார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் லிபரேசன் அமைப்புக்கு வெகுஜன அமைப்பு தேவை என்கிற கருத்து இந்தியா முழுவதும் எழுந்தது. அதற்காக சென்னையில் கருத்தரங்கு நடத்துவது என்றும், தலைவராக நடராசன் செயல்படுவார் என்றும் முடிவு செய்யப்பட்டது.

அந்தக் கருத்தரங்கில் தோழர் எஸ்.நடராசன் தலைவராகவும், விவசாய சங்கத்தை சேர்ந்த யூ.சி.நாராயணசாமி செயலாளராகவும், இந்திய – சீன நட்புறவுக் கழக்கத்தை சேர்ந்த ஆடிட்டர் சேஷாத்ரி பொருளாளராகவும் தேர்வு செய்து, பெரியார் திடலில் மிக பிரமாண்டமாக மாநாடு நடத்துவது என்றும், பெரியார் திடலில் இருந்து மெரீனா கடற்கரை வரை ஊர்வலமாக சென்று சீரணி அரங்கில் பொதுக்கூட்டம் நடத்துவது என்றும் தீர்மானம் நிறைவேறியது. 

பெரியார் திடலில் நடைபெற்ற மாநாட்டில் இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட இடதுசாரி சிந்தனையாளர்கள் கலந்து கொண்டனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் லிபரேசன் அமைப்பின் வெகுஜன அமைப்புக்கு ‘தமிழக மக்கள் முன்னணி’ என்று பெயர் வைத்தனர்.

வழக்கறிஞர் குழு, விவசாயிகள் குழு, தொழிலாளர் குழு எனப் பல பிரிவுகளில் தொழிலாளர் அமைப்புகள் அமைப்பது என்று முடிவெடுக்கப்பட்டது. பெரியார் திடலில் இருந்து மெரீனா கடற்கரைக்கு மிக பிரமாண்ட ஊர்வலமும், முடிவில் பொதுக்கூட்டமும் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

பொதுக் கூட்டம் முடிந்து திரும்பிய இரண்டாயிரம் தோழர்களை தமிழக அரசு கைது செய்தது. அவர்களை வெளியே கொண்டுவர வழக்கறிஞர் குழு செயல்பட்டது.  

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் லிபரேசன் அமைப்பின் வெகுஜன அமைப்புக்கு ஆதரவளிக்கும் தோழர்களை ஒருங்கிணைக்க  1982 ஆம் ஆண்டு டில்லியில் ஒரு மாநாடு நடத்த கட்சி ஏற்பாடு செய்தது.

அந்த மாநாட்டில் தமிழக மக்கள் முன்னணி போன்று இந்தியா முழுவதும் இருக்கும் வெகுசன அமைப்புகளை இணைத்து அதற்கு இந்திய மக்கள் முன்னணி என்று பெயர் வைக்கப்பட்டது. தலைவராக பீகாரைச் சேர்ந்த ராஜாராம், துணைத் தலைவராக ஐ.பால்ராஜ், தமிழக தலைவராக எஸ்.நடராசன் ஆகியோர் தேர்வானார்கள்.

இலங்கையில் அமைதி திரும்ப இந்திய ராணுவத்தை அனுப்ப வேண்டும் என்று தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்ற போது, இந்தியாவும் ராணுவத்தை அனுப்பியது. 

அப்போது, அதற்கு எதிரான ஒரு நிலைபாட்டை கட்சி எடுத்தது. இந்தியாவில் இருக்கிற தேசிய இனங்களைப் பாதுகாக்காத இந்திய ராணுவம், இலங்கையில் உள்ள தமிழ் தேசிய இனத்தை எப்படிப் பாதுகாக்கும் என்று கேள்வி எழுப்பியதுடன், ‘’முடிந்தால் தமிழ்த் தேசிய போராளிகளுக்கு ஆயுதம் வழங்கு... இல்லை என்றால் இந்தியாவுக்கு திரும்பிவிடு’’ என்று தோழர் எஸ்.நடராசன் தலைமையில் நூறு பேர் கன்னியாகுமரியில் இருந்து கவர்னர் மாளிகை வரை முற்றுகைப் போர்ப் பயணத்தை தொடங்கினர்

ஒவ்வொரு நாளும் முப்பது கிலோ மீட்டர் போர்ப் பயணம் என நாற்பத்தி இரண்டு நாட்களில் 150௦ கிலோ மீட்டர் தூரம் நடைபயணம் கண்டனர். வழி நெடுக மக்களைச் சந்தித்து ஈழப் பிரச்சினை குறித்த துண்டுப் பிரசுரங்களை விநியோகிப்பது, இரவு தங்குகிற கிராமங்களில் ஒவ்வொரு நாளும் பொதுக் கூட்டங்கள் நடத்துவது என்று பெரும் பிரச்சாரத்தை நடத்தினார்கள்.

விருதுநகரில் க.சுப்பு, மதுரையில் பழ.நெடுமாறன், சென்னையில் முரசொலி அடிகளார் என பலர் வரவேற்பு அளித்து பரப்புரை வழங்கினர். கவர்னர் மாளிகையில் நுழையும் போது அனைவரும் கைதாகினர்.

ஈழப் பிரச்சினைக்காக நடத்திய போராட்டத்தால் பி.அண்ட் சி மில்லில் தான் பார்த்து வந்த வேலையை இழந்தார் நடராசன். அதனை எதிர்த்து வழக்காடி நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு நான்கு ஆண்டுகளின் சம்பளத்துடன் வேலையையும் பெற்றார் நடராசன்.

அந்த நான்கு ஆண்டுகளில் இந்திய மக்கள் முன்னணி அமைப்பை பலபடுத்த பெரும் போராட்டங்களையும் சந்தித்தார் நடராசன்.

1990 ஆம் ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் லிபரேசன் அமைப்பு ஆயுதப் போராட்டத்தை கைவிடுவது என்று வெளிப்படையாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து இந்தியா முழுவதில் இருந்தும் அந்த அமைப்பை ஆதரித்த வெகுஜன அமைப்புகளில் இருந்து பலர் வெளியேறினார்கள்.

பேராசிரியரும் கவிஞருமான இன்குலாப், டி.எஸ்.எஸ்.மணி, பிரான்சிஸ், பேராசிரியர் திருமாவளவன், முருகன், டாக்டர் சிவக்குமார் என பலருடன் இணைந்து இந்திய மக்கள் முன்னணி அமைப்பில் இருந்து தோழர் எஸ்.நடராசனும் வெளியேறினார்.

பிறகு, ராம்விலாஸ் பஸ்வான் துவங்கிய லோக் சன சக்தி அமைப்பின் தமிழக செயலாளர் பொறுப்பு தோழர் நடராசனுக்கு கிடைத்தது. அந்த அமைப்பின் செயல்பாடுகள் அவருக்கு ஒத்துவரவில்லை. அதனால், அந்த அமைப்பில் இருந்து விலகியவர், 1994–ல் பஞ்சமி நில மீட்புப் போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.

நிலத்தில் வேலை செய்யும் எங்களுக்கு நிலம் கிடையாது. படிப்பும் கிடையாது என்று 1891 ஆம் ஆண்டு செங்கல்பட்டு கலெக்டரிடம் அயோத்திதாச பண்டிதரும், ரெட்டைமலை சீனிவாசனும் சேர்ந்து மனு கொடுத்துள்ளனர். 

அந்த மனு விக்டோரியா மகாராணியின் பார்வைக்குச் செல்கிறது. அவரது மேலான பரிசீலனையில் பஞ்சமர்களுக்காக பஞ்சமி நிலங்கள் தமிழகம் முழுவதும் பன்னிரண்டு லட்சம் ஏக்கர் ஒதுக்கப்பட்டன.

அப்படி ஒதுக்கப்பட்ட நிலங்களில் செங்கல்பட்டு அருகே உள்ள காரனைபாக்கம் கிராமத்தில் 650 ஏக்கர் பஞ்சமி நிலம் உள்ளது. தலித் அல்லாதவர்கள் பயன்படுத்த முடியாத அந்த நிலத்தை ஒரு வடநாட்டை சேர்ந்த தொழிலதிபருக்கு வீரபத்திரன் என்பவரின் மகன் தீபன் சக்கரவர்த்தி என்பவர் விற்பனை செய்து முன்பணம் பெற்றுள்ளார். 
 
இந்த தகவல் அறிந்த அந்தப் பகுதி தலித் மக்கள் பதிவு அலுவலகத்தை முற்றுகையிட்டு தங்களது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். மேலும் நடராசன் ஆலோசனையில் பஞ்சமி நிலத்தில் அம்பேத்கார் சிலை ஒன்றையும் வைத்துள்ளனர்.

அந்த சிலையை விஷமிகள் சிலர் உடைத்து விட்டதால், அவர்களைக் கைது செய்யக் கோரி செங்கல்பட்டு சப் கலெக்டர் அலுவலகம் முன்பு மக்கள் திரண்டனர்.

அசம்பாவிதம் நடந்துவிடுமோ என்கிற அச்சத்தில் கூட்டத்தை கலைக்க போலீஸ் துப்பாக்கி சூடு நடத்தியது. அதில் ஜான் தாமஸ், ஏழுமலை ஆகிய இருவரும் குண்டுக்கு இரையாகினர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் கைதாகி திருச்சி சிறைக்கு அனுப்பப்பட்டனர். பஞ்சமி நிலத்தை மீட்க முன் நின்று போராடிய மாமண்டூர் பாதிரியார் மார்ட்டின் அலுவலகம் மூடப்பட்டது.

அதன் பிறகு ஐ.ஏ.எஸ். அதிகாரி கருப்பன் தலைவராகவும், என்.ஜி.ஒ. ஜெயகரன் ஜோசப் செயலாளராகவும், நடராசன் கொள்கைப்பரப்புச் செயலாளராகவும், ஆர்.கே.சாமிநாதன் அமைப்பு செயலாளராகவும் கொண்ட பஞ்சமி நிலம் மீட்பு அமைப்பு தொடங்கப்பட்டது.

பஞ்சமி நிலத்திற்காகப் போராட்டம் நடத்துவது, பஞ்சமி நிலத்தை மீட்பது, அம்பேத்கார் ஊர்தி பயணம் செல்வது, அதே இடத்தில் அம்பேத்கார் சிலை வைப்பது என்று பல போராட்ட வடிவங்களை கொண்டு அந்த அமைப்பு விழிப்புணர்வுப் பிரச்சாரத்தில் இறங்கியது.

தி.நகர் பனகல் பூங்கா அருகில் ஏற்பாடு செய்திருந்த பொதுக் கூட்டத்தில் முப்பதாயிரம் பேர் கலந்து கொண்டனர். ராம்விலாஸ் பஸ்வான் கலந்து கொண்டு சிறப்புரை வழங்கினார். பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ், செயலாளர் தலித் எழில்மலை ஆகியோரும் ஆதரவு தெரிவித்துப் பேசினர்.

அதன் பிறகு அம்பேத்கார் சிலை வைக்கச் சென்ற மக்களை செங்கல்பட்டு சாலையில் போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் மறியல் போராட்டத்தைத் தொடர்ந்த மக்களைப் போலீசார் கைது செய்தனர்.

சிங்கப்பெருமாள்கோவில் கிராமத்தில் சாலை மறியல், செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகம் முன்பும் மறியல் என தொடர்ச்சியான போராட்டங்கள் நடைபெற்றன.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைதாகி விடுதலை செய்யப்பட்டனர். இதனால், பஞ்சமி நிலம் பற்றிய விழிப்புணர்வு நாடு முழுவதும் பரவியது. அம்பேத்கார் சிலை உடைக்கப்பட்ட அதே இடத்தில் அம்பேத்காரின் புதிய சிலை நிறுவப்பட்டது.

சாதி வெறி வன்முறைக்கு எதிராக மக்களைத் திரட்டிப் பல போராட்டங்களை நடத்திய எஸ்.நடராசன், 1995 ஆம் ஆண்டு கொடியங்குளத்தில் நடைபெற்ற சாதிய கலவரத்திற்கு எதிராக போராட்டங்களை நடத்தினார். அப்போது புதிய தமிழகம் என்கிற அமைக்க உருவாக்க காரணமாகவும் இருந்தார். 

திராவிடர் கழகத்தில் இருந்து விலகிய தோழர் வள்ளிநாயகம் நட்பு கிடைக்க அவருடன் இணைந்து தாத்தா ரெட்டைமலை சீனிவாசன் பேரவை என்கிற அமைப்பை தொடங்கி, அதன் மூலம் பல போராட்டங்களைச் சந்தித்து வந்தவர் தோழர் நடராசன்.

கட்டாய மதமாற்றச் சட்டத்திற்கு எதிராக சென்னையில் உள்ள அம்பேத்கார் மணிமண்டபத்தில் இருந்து விழிப்புணர்வு பிரச்சார ஊர்தி பயணம் தொடங்கிய தோழர் எஸ்.நடராசனையும், அவரது தோழர்களையும், விடுதலை சிறுத்தைகள் அமைப்பை சேர்ந்த தொல்.திருமாவளவன், கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சி.மகேந்திரன், கவிஞர் இன்குலாப் உட்பட பலர் வாழ்த்தி வழி அனுப்பி வைத்தனர். கன்னியாகுமரி வரை  விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தார். 

சமூகப் போராளியாக தனது வாழ்க்கை முழுவதும் போராட்டக் களத்தில் நிற்கும் எஸ்.நடராசன், கோடம்பாக்கத்தில் தங்கி இருந்தபோது, தனக்கு பிடித்த  தோழி பானுமதி என்பவரை 1974 ஆம் ஆண்டு திருப்பதியில் திருமணம் செய்து கொண்டார்.

கல்யாண சுந்தரம் முதலியார் – மீனாட்சி அம்மாள் தம்பதிகளின் மகளான பானுமதி, தோழரின் பல போராட்டங்களுக்கு தனது ஆதரவையும் பங்களிப்பையும் வழங்கி இருக்கிறார்.

“திருமணத்திற்குப் பிறகு நாற்பத்தி எட்டு ஆண்டுகள் என்னுடைய போராட்ட வாழ்க்கையில் பங்கெடுத்து எனது அமைப்புக்கும், குடும்பத்திற்கும் பெருமை சேர்த்தவர் எனது துணைவியார் பானுமதி” என்று கூறும் தோழர் நடராசன், “அவர் ஒத்துழைப்பு இல்லை என்றால் என்னால் உழைக்கும் மக்களுக்கான வாழ்க்கையை வாழ்ந்திருக்க முடியாது” என்கிறார்.

தோழர் நடராசன் – தோழர் பானுமதி தம்பதியினருக்கு கவிதா, காஞ்சனா, கல்பனா என்று மூன்று மகள்கள் பிறந்தனர்.

பி.எஸ்.சி. நியூட்ரீசியன் படித்த மூத்த மகள் கவிதாவை வடக்கன்குளம் பெஞ்சமின் – அன்னக்கிளி தம்பதியரின் மகன் வரதன் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளார். வரதன் மருத்துவத் துறையில் வேலை செய்து வருகிறார் இவர்களுக்கு ஆகாஷ் ஆண்டனி, அவினாஷ் ஆண்டனி என்கிற இரு மகன்கள் உள்ளனர்.

எஞ்சினியர் படித்து மின்சாரத் துறையில் பணிபுரிந்து வரும் இரண்டாவது மகள் காஞ்சனாவை , திருவள்ளூர் சந்திரசேகரன் – ரோசிலின் வயலட் தம்பதியின் மகன் குணசேகரன் என்பவருக்குத் திருமணம் செய்து கொடுத்துள்ளார். குணசேகரன் பி.எஸ்.சி. அக்ரிகல்சர் படித்துள்ளார். இவர்களுக்கு பிளஸ்சி, நிஷா என்கிற இரு மகள்களும், மோனிஷ் என்கிற ஒரு மகனும் உள்ளனர்.

பி.பி.ஏ. படித்த மூன்றாவது மகள் கல்பனாவை பண்ருட்டி அருகே உள்ள பண்டகமேடு கிராமத்தைச் சேர்ந்த ஆசிரியர் கலியமூர்த்தி – பட்டம்மாள் தம்பதியின் மகன் ராஜா என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளார். ராஜா விஷூவல் கம்யூனிகேஷன் படித்துள்ளார். இவர்களுக்கு ஜனனி, தான்யாஸ்ரீ என இரு மகள்கள் உள்ளனர்.

மக்களுக்கான போராட்டங்களில் பங்கெடுத்த ‘சமூகப் போராளி’ தோழர் எஸ்.நடராசன், தனது திருமணத்தையும், தனது மகள்களின் திருமணத்தையும் பெண்களின் விருப்படியே செய்துள்ளார்.

மாநில அளவில் நடைபெற்ற கபடி விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்டு எம்.ஜி.ஆரின் கைகளால் பரிசு பெற்றுள்ள நடராசன், பி.அண்ட் சி மில் தொழிலாளர்களின் கபடி விளையாட்டுக் குழு கேப்டனாகவும் இருந்துள்ளார்.

சாதி, மத அரசியலுக்கு எதிராக ஏராளமான போராட்டங்கள், கூட்டங்களில் பங்கெடுத்துள்ள ‘சமூகப் போராளி’ தோழர் எஸ்.நடராசன், இன்றும் அதே உத்வேகத்துடன் செயல்பட்டு வருகிறார்.

சென்னை சூளைமேடு பகுதியில் உள்ள கில்நகர் பூங்காவில் தினமும் நடைப் பயிற்சியில் ஈடுபடும் தோழர் எஸ்.நடராசன், பூங்காவைப் பராமரிக்க நடையாளர் சங்கம் என்கிற அமைப்பை உருவாக்கக் காரணமாகவும் இருந்திருக்கிறார்.  அவருடைய வழி காட்டுதலும், ஆலோசனைகளும் அந்த சங்கத்திற்கும், பூங்காவிற்கும் பெரும் துணையாக இருந்துள்ளன.

அதிகமாக எதற்கும் ஆசைப்படாத குணமுடையவர் இவர், அதனால்தான் இவரது வாழ்க்கை இன்றுவரை ஆனந்தமாக இருக்கிறது. 

No comments:

Post a Comment