Monday, April 22, 2019

நடராஜ் தியேட்டர் அதிபர் வெங்கிடாசலம்

திரு ஆர்.வெங்கிடாசலம்

கர்மவீரர் காமராஜர் சேலம் நகருக்கு எப்போது சென்றாலும் ரத்தினவேல் கவுண்டரின் அழகாபுரம் வீட்டிற்கு மறக்காமல் செல்வார். அங்குதான் அவருக்கு மதிய சாப்பாடு. அந்த வீட்டுச் சாப்பாடு என்றால் காமராஜருக்கு ரொம்ப பிடிக்கும். 

அதேபோல காமராஜர் என்றால், ரத்தினவேல் கவுண்டருக்கு ரொம்ப பிரியம். காமராஜரின் தொண்டனாக செயல்பட்டவர். காங்கிரஸ் ஆட்சி காலத்தில் 1958 முதல் 1967 வரை பத்தாண்டுகள் சேலம் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தவர்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய நான்கு மொழிகளில் பேசத் தெரிந்தவர், ரத்தினவேல் கவுண்டர்.

இரத்தினவேல் கவுண்டருக்கு ராசாத்தி அம்மாள், கந்தாயி அம்மாள் என இரு மனைவிகள். பழனிச்சாமி, ஜெயக்குமார், ஜெயப்பிரகாஷ் ஆகிய மூன்று மகன்களும், நாகலட்சுமி, சரஸ்வதி, ஜெயலட்சுமி, ஜெகதாம்பாள் ஆகிய நான்கு மகள்களும் ராசாத்தி அம்மாளுக்கு பிறந்தவர்கள். வெங்கடாசலம் என்கிற மகனும், விஜயகுமாரி என்கிற மகளும் கந்தாயி அம்மாளுக்குப் பிறந்தவர்கள்.

மனைவி  சண்முகவள்ளியுடன் வெங்கடாசலம்
நமது நண்பர் வெங்கடாசலம் 1949 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி பிறந்தவர். லிட்டில் பிளவர் உயர்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு வரை படித்த வெங்கடாசலம், அதன் பிறகு தனது சகோதரர்களுடன் இணைந்து தங்களுடைய கதர்க் கொடி பீடி கம்பெனியைக் கவனித்துக் கொண்டார்.

சேலத்தில் பெரும் புகழுடன் விளங்கிய திரைப்பட தயாரிப்பாளரும், இயக்குநருமான மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர்.சுந்தரம், தனக்கு உதவி தேவைப்படும் போது ரத்தினவேல் கவுண்டரை அழைத்துக் கொள்வார்.

சினிமா மீது டி.ஆர்.சுந்தரம் வைத்திருந்த காதல், ரத்தினவேல் கவுண்டரையும் கவர்ந்தது. தானும் ஒரு திரையரங்கம் கட்ட வேண்டும் என்கிற எண்ணம் ரத்தினவேல் கவுண்டரின் மனதில் எழுந்தது. 

அதன் விளைவாக சேலம் ஐந்து ரோட்டில் ரத்னா என்கிற திரையரங்கைக் கட்டினார்.

சென்னையில் உள்ள சூளை பகுதியில் நடராஜ் திரையரங்கை நடத்தி வந்த மும்பையை சேர்ந்த பாபுலால் புவானா, அந்த திரையரங்கை விற்க முடிவு செய்திருக்கிறார் என்கிற செய்தி அறிந்து, அந்த திரையரங்கையும் விலைக்கு  வாங்கினார் ரத்தினவேல் கவுண்டர்.

நடிகர் திலகம் சிவாஜியுடன் வெங்கடாசலம்
நடராஜ் திரையரங்கைக் கவனித்துக் கொள்ளச் சென்னைக்குத் தனது மகன் வெங்கடாசலத்தை ரத்தினவேல் கவுண்டர் அனுப்பி வைத்திருக்கிறார்.

நடராஜ் திரையரங்கைக் கவனித்துக் கொள்ள சென்னை வந்த வெங்கடாசலம் சென்னையிலேயே திருமணம் செய்து கொள்வார் என்று அப்போது நினைக்கவில்லை.

பீடி கம்பெனியை எப்படித் தனது சகோதரர்களுடன் இணைந்து கவனித்துக் கொண்டாரோ, அதே போல திரையரங்கு நிர்வாகத்தையும் கவனித்துக் கொண்டார், வெங்கடாசலம்.

தந்தை ரத்தினவேல் கவுண்டரின் மறைவுக்குப் பிறகு, சேலம் செவ்வாப்பேட்டை அரிசிபாளையம் பகுதியில் பெரிய ரத்னா திரையரங்கம், அஸ்தம்பட்டியில் ரோகினி திரையரங்கம், கன்னங்குறிச்சியில் ஆனந்த் சினிமா என ஐந்து திரையரங்குகளாக, அவர்களது திரைத்தொழில் விரிவடைந்தது.

மகன் பாலாஜி வெங்கடாசலம்
சேலத்தில் மிகப்பெரிய திருமண மண்டபம் கட்ட வேண்டும் என்கிற எண்ணம் உதயமானது. அதன் விளைவு?, அழகாபுரம் பகுதியில் ரத்னவேல் கல்யாண மண்டபம் மிகப் பிரமாண்டமாக உருவானது.

அந்தத் திருமண மண்டபத்தில் எம்.ஜி.ஆர். தலைமையில் பழனிச்சாமி – விஜயலட்சுமி திருமணம், கலைஞர் கருணாநிதி தலைமையில் வீரபாண்டி ஆறுமுகத்தின் மகன் செழியன் திருமணம் என பல புகழ் பெற்ற விஐபிக்களின் திருமணங்கள் நடைபெற்றுள்ளன. விழா ஒன்றுக்கு வந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, அங்கு தங்கியதுடன், அங்கு இடியாப்பமும், முட்டை பாயாவும் சாப்பிட்டுப் பாராட்டி உள்ளார். 

சேலத்தில் உள்ள ரத்னா திரையரங்கம், ரத்னா காம்ளக்ஸ் ஆகியவற்றை இவரது சகோதரர் பழனிச்சாமி கவனித்து வருகிறார். சேலம் ஐந்து ரோட்டில் பிரமாண்டமாக உள்ள ரத்தினவேல் திருமண மண்டபத்தையும், ரத்தினவேல் காம்ப்ளக்ஸ் கட்டடத்தையும் இன்னொரு சகோதரரான ஜெயக்குமார் கவனித்து வருகிறார்.

வடபழனி முருகன் கோவிலைக் கட்டிய ஐந்து தர்மகர்த்தாக்களில் ஒருவர் ஞானசுந்தர நாயக்கர். சண்முகம் பிராண்ட் ஸ்டீல்ஸ் டிரங்க் ஒர்க்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரான அவருக்கு சாந்தலட்சுமி, சண்முகவள்ளி என இரு மகள்களும், பழனிச்சாமி என்கிற ஒரு மகனும் உள்ளனர். இதில் சண்முகவள்ளி என்பவரை வெங்கடாசலம் திருமணம் செய்து கொண்டார்.1973 ஆம் ஆண்டு ஏவி.எம். ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் பிரமாண்டமாக நடைபெற்ற திருமண விழாவில் தொழில் அதிபர்கள், திரையுலகினர் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

வெங்கடாசலம் - சண்முகவள்ளி தம்பதிக்கு ஜெயஸ்ரீ என்கிற மகளும், பாலாஜி என்கிற மகனும் பிறந்தனர்.

எத்திராஜ் கல்லூரியில் அக்ரிகல்சர் படித்த தனது மகள் ஜெயஸ்ரீயை, அண்ணாசாலையில் உள்ள குணா காம்ப்ளக்ஸ் உரிமையாளரும், பில்டருமான தர்மலிங்க நாயக்கரின் மகன் ஞானசேகர் என்பவருக்கு 1996 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொடுத்துள்ளார், வெங்கடாசலம். 

ஞானசேகர் – ஜெயஸ்ரீ தம்பதிக்கு சுஜித்குமார், கணேஷ்பாபு என இருமகன்கள் உள்ளனர்.

லயோலா கல்லூரியில் டிகிரி முடித்த தனது மகன் பாலாஜிக்கு, சென்னை கே.கே.நகரை சேர்ந்த தொழிலதிபர் தெய்வசிகாமணி நாயக்கரின் மகள் ஜோதீஸ்வரியை 2005 ஆண்டு திருமணம் செய்து வைத்தார். அந்த திருமண விழா ராணி மெய்யம்மை ஹாலில் மிகப் பிரமாண்டமாக நடைபெற்றது.

பாலாஜி – ஜோதீஸ்வரி தம்பதிக்கு தேஜஸ் கண்ணா என்கிற ஒரு மகன் உள்ளார்.

தன் வாழ்நாள் முழுவதும் வெற்றியை சுவைத்த வெங்கடாசலம், தோல்வியை ஒரு முறை கூட சந்தித்ததில்லை. ஆனால், அவரை நிலை குலைய வைத்தது, மகன் பாலாஜின் திடீர் மரணம்.

சென்ற 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் 12 ஆம் தேதி பாலாஜி, அவரைவிட்டுப் பிரிந்தார். இப்போது அவருக்கு ஆறுதலாக இருப்பது, ஆறாம் வகுப்பு படிக்கும் அவரது பேரன் தேஜஸ் கண்ணா.

அதீத  தன்னம்பிக்கையும் பலவகைத் திறனும் கொண்டு எங்களைக் கவர்ந்தவர் வெங்கடாசலம். தனது குணத்தால் பல இதயங்களைக் கொள்ளை கொண்ட இவர், எங்கள் நட்பு வட்டத்திற்கு கிடைத்தது பெரும் வரம்.

No comments:

Post a Comment